Last Updated : 11 Dec, 2017 04:28 PM

 

Published : 11 Dec 2017 04:28 PM
Last Updated : 11 Dec 2017 04:28 PM

மாயமான மீனவர்களை மீட்கக்கோரி குமரியில் 5-வது நாளாக போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

குமரி மாவட்டத்தில் புயலால் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி இரவிபுத்தன்துறை, மார்த்தாண்டம் துறை, சின்னத்துறை ஆகிய மீனவ கிராமங்களில் இன்று 5-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பில் மாயமான மீனவர்கள் அனைவரையும் மீட்கவேண்டும். நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதியில் இருந்து மீனவர்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் நடந்த யில் மறியல் போராட்டம் நள்ளிரவு வரை நடந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து மீனவ கிராமங்களில் மறியல், கடலில் இறங்கி போராட்டம், கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் ஆகியவை நடந்தன.

5வது நாளாக மீனவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. இரவிபுத்தன் துறை சந்திப்பில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.

இதைப்போல் மார்த்தாண்டம்துறையிலும் மீனவர்கள் அமரந்து போராட்டம் நடத்தினர். இதில் நீரோடி, மார்த்தாண்டம் துறை மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

ஆயிரக்கணக்கானோர் இரவிபுத்தன்துறையிலும், மார்த்தாண்டம் துறையிலும் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதைப்போல் சின்னத்துறையில் 3 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பழனிசாமி நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

மேலும் மீனவர்களைத் தேடும் பணியை வேகப்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம், மற்றும் அதிநவீனப் படகுகள் மீனவர்களை தேடும் பணிக்கு நிறுத்த வேண்டும். மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை மீட்பு பணியில் அரசு ஈடுபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை சின்னத்துறை மீனவர்கள் வலியுறுத்தினர்.

5வது நாளாக தொடர் போராட்டம் நடந்ததால் குமரி கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x