Published : 14 Dec 2017 09:25 AM
Last Updated : 14 Dec 2017 09:25 AM

நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காவலாளி விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ராணி பத்மினி. சென்னை அண்ணாநகரில் தனது தாயார் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் 1986-ம் ஆண்டு இருவரும் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் வீட்டில் கார் டிரைவராக பணிபுரிந்த ஜெபராஜ், காவலாளி லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகியோரை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 1989-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் கார் டிரைவர் ஜெபராஜுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து 2 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவலாளி லட்சுமி நரசிம்மனுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து கடந்த 2001-ல் உத்தரவிட்டது. இதையடுத்து லட்சுமி நரசிம்மன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சிறையில் உள்ள லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி எஸ்.எல்.மேரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ்ஷக்தேர் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x