Published : 23 Dec 2017 08:52 AM
Last Updated : 23 Dec 2017 08:52 AM

தினமலர் வெளியீட்டாளரின் மனைவி உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி: மதுரை வலையங்குளத்தில் உடல் தகனம்

தினமலர் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதியின் மனைவி எஸ். சுப்பலட்சுமி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் மதுரையில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதியின் மனைவி எஸ்.சுப்பலட்சுமி. இவர் சில மாதங்களாக உடல்நலமின்றி சென்னையில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். அவருக்கு வயது 78. அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், டிடிவி. தினகரன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக அகில இந்திய பொதுச் செயலர் எச்.ராஜா, மாநில செயலர் ஸ்ரீனிவாசன், விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் வைகை செல்வன், சுந்தரராஜன், முத்துராமலிங்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை, பதிவாளர் சின்னையா மற்றும் பேராசிரியர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

அவரது உடல் நேற்று பிற்பகல் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வலையங்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மகன்கள் எல். ராமசுப்பு, எல்.ஆதிமூலம் ஆகியோர் இறுதிச் சடங்கு செய்தனர். அதன் பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

எஸ்.சுப்பலட்சுமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x