Published : 09 Dec 2017 10:45 AM
Last Updated : 09 Dec 2017 10:45 AM

21-ல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் விடுமுறை பிளஸ் 1, 2 அரையாண்டு தேர்வு நாள் மாற்றப்படுமா?- இதுவரை மாற்று தேதி அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 21-ம் தேதி அத்தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவது குறித்து இதுவரை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. இத்தேர்வுகள் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதேபோல், எஸ்எஸ்எல்சி அரையாண்டுத் தேர்வு 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையே, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நாளான டிசம்பர் 21-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகளும், பிளஸ் 2 வகுப்புக்கு வேதியியல், கணக்குப்பதிவியல் பாட தேர்வுகளும், எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு விருப்ப மொழி தேர்வும் (சிறுபான்மை மாணவர்களுக்கு) நடைபெற உள்ளன.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய 3 தேர்வுகளையும் பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்தான் வழங்கப்படும். இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் காரணமாக டிசம்பர் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, அன்றைய தினம் நடைபெற வேண்டிய பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவது குறித்தும், மாற்று தேதி குறித்தும் பள்ளிக்கல்வித் துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மாற்றுத் தேதி குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x