

படம்: எல்.சீனிவாசன்
சென்னை: அதிமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும், தனித்து ஆட்சி என்பதிலும் உறுதியாக உள்ளது. இந்நிலையில், கடந்த டிச.15 முதல், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. அந்த மனுக்களில் 25 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பொது மற்றும் தனித்தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்கள்பெறப்பட்டன.
புதுச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி பெறப் பட்டன. முதல் நாளில் 1237 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். அதில் 349 பேர், தங்கள் தொகுதியில் பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்திருந்தனர். டிச.23-ம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அதுவரை சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இது கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெறப்பட்ட மனுக்களை விட அதிகம் என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில் விருப்ப மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, கடந்த டிச.27 முதல் நேற்று வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.