

புதுச்சேரி: வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு யாரும் மனுவை வாபஸ் பெறாததால், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேதுசெல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் கலைவாணன் மற்றும் 5 சுயேச்சைகள் என 11 பேர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 17-ம் தேதி வேட்புமனு பரீசீலனை நடந்தது. மனுக்களை நேற்று மாலை 3 மணி வரை வாபஸ் பெறலாம். யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. அதன்பின் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படப்பட்டது. அதன்படி இடைத்தேர்தலில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கான களம் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு வேகம் எடுத்துள்ளது. வேட்பாளர்கள் காலை, மாலை என வேளைகளிலும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.