

திருத்தணி: திருத்தணி அருகே மத்தூர் அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில், மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசிய சம்பவத்தை கண்டித்து மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவ-மாணவியர் பள்ளிக்குச் சென்றனர்.
அப்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர்கள் படித்து வரும் 4 வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பெற்றோர் கூறும்போது, “மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கை ஏற்ப பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனை பயன்படுத்தி, மர்மநபர்கள் அடிக்கடி பள்ளி வளாகத்தில் மது அருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளியின் குடிநீர் தொட்டியை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய தீர்வு காணப்படவில்லை. எனவே அரசு உடனடியாக பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் மனிதக் கழிவை பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், திருத்தணி வட்டாட்சியர் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் திருத்தணி போலீஸார் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனிதக் கழிவை பூசியவர்களை தேடி வருகின்றனர்.