Published : 20 Dec 2017 03:41 PM
Last Updated : 20 Dec 2017 03:41 PM

ஜெ., ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்பு, ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் இன்று (புதன்) ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளது. ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதில், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.

இதற்காக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு, ஷீலா பாலகிருஷ்ணன் இன்று ஆஜரானார். சுமார் 4 மணிநேரம் நடந்த விசாரணையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் கூறியதாகத் தெரிகிறது.

ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக தலைமைச் செயலராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x