Published : 23 Dec 2017 09:47 AM
Last Updated : 23 Dec 2017 09:47 AM
பேரறிவாளனுக்கு வழங்கியதுபோல் தன்னையும் நீண்ட நாள் பரோலில் விடுதலை செய்யக் கோரி, ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனுவுக்கு உள்துறைச் செயலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ரவிச்சந்திரன். இவருக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், குடும்பச் சொத்து பாகப் பிரிவினைக்காக ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக் கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி 17.3.2017-ல் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். அம்மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதனால் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்க 11.7.2017-ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரவிச்சந்திரன் மத்திய அரசின் பாஸ்போர்ட் சட்டம், தொலைத்தொடர்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால், அவரை பரோலில் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியும். இதனால் பரோல் வழங்க முடியாது என சிறைத் துறை டிஐஜி 22.7.2017-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை பரோலில் விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 16-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டேன். குற்றப்பத்திரிகையில் என் மீதான குற்றச்சாட்டில் எந்த இடத்திலும் பாஸ்போர்ட், தொலைத்தொடர்பு சட்டத்தில் குற்றம் புரிந்ததாகக் கூறப்படவில்லை. கூட்டுச் சதி, கொலைக் குற்றத்துக்காகவே எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் என்னுடன் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு, தமிழக அரசு 2 மாதம் பரோல் வழங்கியது. இதனால் எனக்கும் பரோல் வழங்கலாம். எனவே, எனக்கு நீண்ட நாள் பரோல் அல்லது ஒரு மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய், திருமுருகன் வாதிட்டனர். விசாரணைக்குப் பிறகு மனு தொடர்பாக உள்துறைச் செயலாளர், சிறைத் துறை ஏடிஜிபி, டிஐஜி, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT