Published : 30 Dec 2017 10:11 AM
Last Updated : 30 Dec 2017 10:11 AM

உணவு வணிகர்கள் உரிமம் பெற நாளை கடைசி நாள்: சென்னையில் 50% பேர் மட்டுமே பதிவு

உணவு வணிகர்கள் பாதுகாப்பு உரிமம், பதிவுச்சான்று பெற நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் சென்னையில் இதுவரை 50 சதவீத உணவு வணிகர்கள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உரிமம், பதிவு கள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தள்ளுவண்டி கடைகள், சிறு, குறு வணிகர்கள், ஓட்டல்கள், 5 நட்சத்திர விடுதிகள் என உணவு வணிகம் செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழை டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெற வேண்டும். இதற்காக மாநில உணவு பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதோடு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், தற்போது வரை சென்னையில் 50 சதவீத வணிகர்கள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 32,002 பேர் உணவு வணிகம் செய்து வருகின்றனர். இதில் தற்போது வரை 7,800 பேர் உரிமமும், 8,209 பேர் பதிவுச் சான்றிதழும் பெற்றுள்ளனர். இன்னும் 50 சதவீதம் பேர் உரிமம், பதிவுச் சான்று பெறவேண்டி உள்ளது.

ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு குறைவாக வணிகம் செய்யும் உணவு வணிகர்கள், ரூ.100 செலுத்தி பதிவுச் சான்றிதழை அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள், உணவு விடுதிகள் உரிமக் கட்டணமாக ரூ.2 ஆயிரம், உணவு தயாரிப்பாளர்கள் ரூ.3 ஆயிரம், 3 நட்சத்திர உணவு விடுதிகள் ரூ.5 ஆயிரமும் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அபராதம் விதிக்கப்படும்

டிசம்பர் 31-ம் தேதிக்குள் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறத் தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரூ.5 லட்சம் வரை அபராதத்துடன், 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ‘நியமன அலுவலர் அலுவலகம், எண்.33, மேற்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15’ என்ற முகவரியிலும், 044-23813095 என்ற தொலைபேசி எண்ணிலும் வார வேலை நாட்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x