Published : 24 Dec 2017 10:06 AM
Last Updated : 24 Dec 2017 10:06 AM
பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பற்றிய ஒருநாள் சிறப்பு பயிலரங்கம் தமிழக அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் உள்ள தொழில்வாய்ப்புகள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் சென்னையில் ஈக்காடுதாங்கலில் உள்ள அந்த நிறுவனத்தில் வருகிற 29-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.
பயிலரங்கின் நோக்கம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிலரங்கமானது மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (சிப்பெட்) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கழிவு மேலாண்மை மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருமானத்தைப் பெருக்குவது இந்த பயிலரங்கின் நோக்கம் ஆகும்.
பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், இத்துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
டிசம்பர் 26-ம் தேதி
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை asst-cdp@editn.in என்ற இ-மெயிலுக்கு டிசம்பர் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய பயிற்சிப் பொறுப்பாளர் தினேஷ் குருதேவ் என்பவரை 8668103217 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT