Published : 17 Dec 2017 10:36 AM
Last Updated : 17 Dec 2017 10:36 AM

மீனவர்களை காப்பாற்ற தவறியதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்: சென்னையில் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு

ஒக்கி புயலில் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்றத் தவறியதாக கூறி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனர் ராமதாஸ், மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கேரள அரசு மிக வேகமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை செய்தது. கேரள முதல்வரை பார்த்து, தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு செயல்படவில்லை

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை. 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2 மீனவர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு சொல்கிறது. தமிழக அரசு ஒரு மீனவரைக்கூட காப்பாற்றவில்லை. ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த அரசும், முந்தைய அரசும் மீனவர் சமுதாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தினார்கள். உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இங்குள்ள அரசு செயல்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஆளுநர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதில் தவறில்லை.

இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x