Published : 23 Dec 2017 10:12 AM
Last Updated : 23 Dec 2017 10:12 AM

ரூ.350 கோடி மதிப்பிலான மின்சார பில்லர் பாக்ஸ்களை மாற்றும் டெண்டரை இறுதி செய்யக் கூடாது: மின் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் ரூ. 350 கோடி மதிப்பில் தெருவோரங்களில் உள்ள ஒரு லட்சம் மின்சார பில்லர் பாக்ஸ்களை மாற்றுவதற்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என மின் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரில் தெருவோரங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 80 மின்சார பில்லர் பாக்ஸ்-களை மாற்றிவிட்டு புதிய பாக்ஸ்களை பொருத்துவதற்கு ரூ. 300 முதல் ரூ. 350 கோடி மதிப்பில் மின்வாரியம் கடந்த 5.10.17-ல் டெண்டர் அறிவித்தது. ஏற்கெனவே உள்ள பழைய பில்லர் பாக்ஸ்களில் எம்எஸ் மற்றும் எஸ்எம்சி என்ற முறையே கையாளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பாக்ஸ்களில் உள்ள சுவிட்ச் உள்ளிட்ட உதிரிபாகங்களை நவீன தொழில்நுட்பத்துடன் பிரத்யேகமாக மாற்றி அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

சட்டவிரோதம்

அதற்காக ஒரே ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனமும், அதைச்சார்ந்த பிற நிறுவனங்களும் மட்டுமே பலன் அடையும் வகையில் டெண்டர் விதிமுறைகளை மின்வாரியம் வகுத்துள்ளது. குறிப்பாக ரூ.10 கோடி வரை வணிகம் செய்தவர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும் என நிபந்தனைகளை விதித்துள்ளதுடன், அந்த தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை அப்படியே காப்பியடித்து அதையே டெண்டர் விதிமுறைகளாகவும் விதித்திருப்பது சட்டவிரோத மானது.

இதனால் பிற தொழில்நுட்பத்தை கையாளும் எங்களைப் போன்ற நிறுவனங்கள் பாதிப்படையும். மேலும் மொத்த டெண்டரையும் அந்த ஒரே நிறுவனத்துக்கும், அதை சார்ந்த பிற நிறுவனங்களுக்கும் கொடுக்கும் நடவடிக்கையை மின்வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது பாரபட்சமற்ற வெளிப்படையான டெண்டர் கிடையாது. எனவே ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்த வேண்டும் என நாங்கள் மின்வாரியத்திடம் மனு அளி்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து, இந்த டெண்டர் அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கி.வெங்கடசுப்பனும், மின்வாரி யம் சார்பில் வழக்கறிஞர் ராமேஸ்வரும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக மின்வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது எனவும் நீதிபதி மின்வாரியத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x