மன்னார்குடியில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய கோயில் யானை ‘செங்கமலம்’
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, கோயில் யானை செங்கமலம், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலம், மவுத் ஆர்கன் வாசிப்பது போன்ற தனது தனித்துவமான செயல்பாடு காரணமாக மிகவும் பிரசித்தி பெற்றது.
பாப் கட்டிங்: இதன் தலை முடி பாப் கட்டிங் வெட்டப்பட்டு, அனைவராலும் பாப் கட்டிங் செங்கமலம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், கோயிலில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோயில் அறங்காவல் குழு தலைவர் இளவரசன் தேசியக் கொடி ஏற்றினார். அப்போது, கோயில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
அப்போது, அங்கிருந்த கோயில் யானை செங்கமலத்திடம் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்த பாகன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, யானை செங்கமலம் தனது காலை மடித்து, தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது. செங்கமலத்தின் கொடி வணக்கம் குறித்த படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
