Published : 11 Nov 2017 09:45 PM
Last Updated : 11 Nov 2017 09:45 PM

திருமண தகவல் மையம் மூலம் விதவைப் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.11.5 லட்சம் மோசடி: போலி அமெரிக்க மாப்பிள்ளை சிக்கினார்

திருமண இணையதளத்தில் பல பெயர்களில் பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி வரன் பார்த்த விதவைப்பெண்ணை அமெரிக்க மாப்பிள்ளை என்று ஏமாற்றி ரூ.11.5 லட்சம் மோசடி செய்த கூடுவாஞ்சேரி நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சென்னை புறநகர் பகுதியை சேந்தவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் கணவரை இழந்து மகனுடன் வாழும் இளம் விதவை. இவர் தன்னுடைய மறுமணத்திற்காக தன்னைப்பற்றிய விபரங்களை மேட்ரிமோனியல் திருமண வெப்சைட்டில் பதிவேற்றம் செய்திருந்துள்ளார்.

இதைப்பார்த்து அமெரிக்காவிலிருந்து டாக்டர்.பிரசாந்த் பிரதாப் சிங் என்பவர் தன்னை எலும்பு நிபுண மருத்துவர் என்றும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் யாரும் துணை இல்லை என்றும், லதாவை பார்த்தவுடன் பிடித்து போய்விட்டது என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் தங்களது தகவல்களை பறிமாறிக்கொண்டுள்ளனர். தனது ஒரே மகனையும் தனது மகன் போல் பார்த்துக்கொள்வதாக பிரதாப் சிங் நம்பும் படி கூறியவுடன் லதா நெகிழ்ந்து போயுள்ளார். துன்பத்திலிருந்த தனக்கும் தனது மகனுக்கும் மீண்டும் ஒரு நல்ல துணை கிடைத்துள்ளது என்று சந்தோஷப்பட்டுள்ளார்.

இதனிடையே லதாவை நேரில் சந்தித்து திருமணம் சம்மந்தமாக பேச வேண்டி இருப்பதாகவும், தான் வேலை பளு காரணமாக வர இயலாததால், (Fiancie Visa) K1, K2 எடுத்து தன்னை வந்து சந்திக்குமாறு பிரதாப் சிங் கூறியுள்ளார். அமெரிக்க செல்ல விசா பெறுவதற்காக லதா தன்னிடமிருந்து ஏறக்குறைய ரூ.11.5 லட்சம் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பிரதாப் சிங்க்கை நம்பி அவரது வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் பிரதாப் சிங் அதன் பின்னர் பதில் எதுவும் சொல்லாமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த லதா இது குறித்து விசாரித்தபோது பணம் பெற்ற நபர் அமெரிக்காவில் இல்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் லதா புகார் அளித்தார்.

புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் டாக்டர்.பிரசாந்த் பிரதாப் சிங் என்ற பெயரில் லதாவிடம் பேசி மோசடி செய்தவர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமார் துரை(33) என்பதும், இவர் ராஜன் துரை, பிரசாந்த் குமார், கௌதம் ஜார்ஜ் குமார் போன்ற பல பெயர்களில் திருமண இணையதளத்தில் பதிவு செய்து, பெண்களிடம் தன்னை அமெரிக்க மாப்பிள்ளை என்று பேசி அவர்களிடம் விசா (Fiancie Visa) பெற்றுதருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

குமாரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி அடைத்தனர்.

திருமண தகவல் இணையதளம் மூலமாக வரன் தேடுபவர்கள் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுமேயொழிய ஆன்லைன் மூலமாக விசா பெற்று தருவதாகவோ, அவசரத் தேவைக்காகவோ, பணம் வேண்டும் என கேட்கும்போது கொடுத்து ஏமாற வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களின் உண்மை தன்மை மற்றும் உறுதி தன்மையை நேரில் சென்று புலப்படுத்திக்கொண்டு அதற்கான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x