Published : 07 Nov 2017 08:55 AM
Last Updated : 07 Nov 2017 08:55 AM

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர் மழையால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு: விவசாயப் பணிகள், கட்டிட வேலைகள் முற்றிலும் முடங்கின

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் விவசாயப் பணிகள், கட்டிட வேலைகள் முற்றிலும் முடங்கிப்போனதால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

சிறு, சிறு வேலையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நகர்ப்புறங்களில் தாங்கள் வழக்கமாகக் கூடிநிற்கும் இடங்களில் வந்து நின்று, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையைப் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ஞானமோகன் கூறியதாவது: கனமழையால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் வேதாரண்யம், தலைஞாயிறு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயப் பணி முற்றிலும் நின்றுபோனது.

குறிப்பாக களையெடுப்பு, நாற்றுப் பறிப்பு, நடவு நடுதல், வரப்பு போடுதல் போன்ற பணிகள் நடைபெற வேண்டிய இத்தருணத்தில், திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேரும், நாகை மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேரும் வேலையிழந்துள்ளனர்.

பயிர்களின் சேதத்தைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, விவசாய தொழிலாளர்களை மறந்துவிடுகிறது. எனவே, விவசாய தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சேகர் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக கொத்தனார், சித்தாள் நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். விவசாயப் பணி இல்லை என்றால் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கைகொடுப்பது இந்தக் கட்டிட வேலைதான். இந்தப் பணியும் நடைபெறாத நிலையில், தொழிலாளர்கள் அன்றாடச் செலவுகளுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x