காஞ்சி, பழவேற்காட்டில் பாஜகவினர் போராட்டம்

காஞ்சி, பழவேற்காட்டில் பாஜகவினர் போராட்டம்
Updated on
1 min read

காஞ்சிபுரம்/பழவேற்காடு: தமிழக பாஜக சார்பில் ஆக.14-ம் தேதியை தேசப் பிரிவினை நினைவு நாளாக அனுசரிக்கிறது. இதையொட்டி காஞ்சி மாவட்ட பாஜக சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி போலீஸார் அனுமதி இல்லாமல் மாவட்டச் செயலர் கே.எஸ்.பாபு தலைமையில் தேசியக் கொடியை ஏந்தி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் தடையை மீறி பழவேற்காடு முகத்துவாரத்துக்கு தேசிய கொடியுடன் படகுகளில் செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிம், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். பழவேற்காடு ஏரி பகுதியில், பாதுகாப்பு கருதி படகுசவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் அதனை மீறி பாஜகவினர் படகுகளில் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in