விடுப்பு மறுக்கப்பட்டதால் சிறப்பு எஸ்.ஐ. சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு பரபரப்பு @ மதுரை

விடுப்பு மறுக்கப்பட்டதால் சிறப்பு எஸ்.ஐ. சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு பரபரப்பு @ மதுரை
Updated on
1 min read

மதுரை: மதுரையில் விடுமுறை அளிக்க காவல் ஆய்வாளர் மறுத்ததால், ஆத்திரத்தில் சிறப்பு சார்பு - ஆய்வாளர் வீடியோ வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மதுரை மாநகர் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு - ஆய்வாளராக கடந்த 2 ஆண்டாக பணிபுரிபவர் ஸ்டாலின் அப்பன் ராஜ். இந்நிலையில், இவரது சகோதரியின் மகளுக்கு ஆக.20-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்காக, காவல் நிலைய ஆய்வாளரிடம் விடுப்பு வழங்கு மாறு கேட்டுள்ளார்.

ஆனால், அவர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், ‘சொந்த அக்காள் மகளின் திருமணத்துக்கு கூட செல்ல முடியவில்லை. ஆய்வாளர் எதற்காக விடுப்பு தர மறுக்கிறார் எனத் தெரியவில்லை. இரவு, பகலாக உழைக்கிறோம்.

முக்கிய நிகழ்ச்சிக்குக் கூட போகமு டியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறேன்,’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, நேற்று மாலை ஸ்டாலின் அப்பன் ராஜ் மற்றொரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அதில், ‘என்னை மன்னித்து விடுங்கள்.

மன உளைச்சலில் அப்படி பதிவிட்டு விட்டேன். எனக்கு விடுமுறை கிடைத்துவிட்டது’ எனக் கூறி இருந்தார். இந்த வீடியோ, மதுரை காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in