Published : 25 Nov 2017 10:09 AM
Last Updated : 25 Nov 2017 10:09 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் செல்ல டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: 2 வாரங்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு அடுத்த 2 வாரங்களில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் போன்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை நாட்களில் விரைவு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

வரும் ஜனவரி 14 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கால விடுமுறையாகும். இதையொட்டி சொந்த ஊரில் பொங்கலைக் கொண்டாட சென்னை யில் இருந்து லட்சக்கணக் கான மக்கள் புறப்படுவார்கள். 300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதா வது:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தற்போது திட்டமிட்டுள்ளோம். அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுள்ளது. அந்த வகையில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

வழக்கமாக முன்பதிவு செய்யும் மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, அடுத்த 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியா கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x