

‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன’’ என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை வளாகத்தில் திங்கட்கிழமை கூறினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபையில் முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச அனுமதி கேட்ட போது அனுமதி அளிக்கப்படவில்லை. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 2.41 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ராயக்கோட்டையில் கல்லூரி மாணவியை 4 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டில் 10 வயதுக்கு கீழ் 61 சிறுமிகளும், 10-14 வயது வரை 78 சிறுமிகளும், 14 முதல் 18 வயதான 280 பெண்களும், 18 முதல் 30 வயதான 395 பெண்களும், 30-50 வயது வரையிலான பெண்கள் 93 பேரும், 50 வயதுக்கும் அதிகமான பெண்கள் 16 பேரும் பலாத்காரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டில் தமிழகத் தில் மொத்தம் 7,495 பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இதுவே 2012ம் ஆண்டில் 7192 ஆக இருந்தது. மேலும் தமிழகத்தில் 2013ம் ஆண்டின் போது 992 பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். கடந்த 2012ம் ஆண்டில் 733 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது தெரிகிறது. இதுபற்றி பேசலாம் என்று எழுந்தால் எங்களுக்கு பேச அனுமதி தரப்படவில்லை.
வேலூரில் மணல் கொள்ளை யர்கள் காவலர் ஒருவரை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் குறித்தும் மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது குறித்தும் பேச அனுமதி கேட்டோம். ஆனால், எதற்கும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக அவையில் இருந்து வெளியேறிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, குடிநீர் பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுமதி தரப்படவில்லை என்பதால் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார்.