

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர், அவரது சகோதரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி நேற்று விசாரணை நடத்தினார்.
பின்னர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது சகோதரியை சந்தித்து ஆறுதல் கூறினார். திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் சம்பவம் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரகுபதி கூறும்போது, “பாதிக்கப்பட்ட மாணவன் பயிலும் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வாரமாக அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. யாரிடமும் மாணவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கவில்லை. ஒரு வாரமாக பள்ளிக்கு வராததற்கு வெவ்வேறு காரணங்களை அவர் தெரிவித்துள்ளார்.
நேரில் விசாரித்த போது தான் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசுக்கு ஆணையம் சார்பில் பரிந்துரை செய்யப்படும்” என்றார்.