பிரதமர் மோடியின் சகோதரர் மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் தரிசனம்

பிரதமர் மோடியின் சகோதரர் மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் தரிசனம்
Updated on
1 min read

மதுரை: பிரதமரின் சகோதரர் பங்கஜ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று (ஞாயிறு) தரிசனம் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி தனது குடும்பத்துடன் டெல்லியில் இருந்து நேற்று மாலையில் ஆன்மிக பயணமாக மதுரை வந்தார். இன்று காலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயிலின் சிறப்புகள் குறித்து சிவாச்சாரியார்கள் விளக்கினர். இன்று நடந்த ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் குறித்தும் விளக்கினர். சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகள் உள்பட பல்வேறு சன்னதிகளுக்கும் சென்று சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் கோயில்களுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு குடும்ப உறுப்பினர்களுடன் தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அவர்களுக்கு கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கார் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in