

சென்னை: ஆட்சியாளர்கள் அறிவுறுத்தலின்பேரில் அரசுப் பள்ளிகளில் போலியாக தேர்ச்சி வழங்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மருத்துவக் கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் தனியார் நிறுவனங்கள் உள்பட பணிக்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சியடையும் வகையில் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் மாணவர்களுக்கு போலியாக தேர்ச்சி வழங்கப்படுகிறது. சரியான முறையில் தேர்வு நடத்தினால் 40 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் கூட தேர்ச்சியடைய மாட்டார்கள். ஆனால் 80, 90 என தேர்ச்சி சதவீதம் காண்பிக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழகத்தின் கல்வித் துறையில் நடக்கும் மோசடிகளால் தான் மாணவர்களின் தரம் குறைகிறதே தவிர, தமிழக மாணவர்கள் தரம் குறைந்தவர்கள் அல்ல.கல்வித் துறையை ஆட்சியாளர்கள் தான் கெடுக்கின்றனர். தேர்வின் போது இவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என வற்புறுத்து கின்றனர்.
அதன் மூலம் எங்களது ஆட்சியில் இத்தனை சதவீதம் பேர் தேர்ச்சியடைந்ததாகக் கூறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றோரை ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
கல்வித் துறையை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அமைச்சர்களை விளம்பரம் செய்யும் பணி போன்றவற்றிலேயே அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீடு வந்த பிறகுதான் மருத்துவ கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.