Published : 21 Jul 2014 09:39 AM
Last Updated : 21 Jul 2014 09:39 AM

போக்குவரத்து துறை ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்துமா?: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. தொழிலாளர்களுக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி பங்கை ஓய்வூதிய அறக்கட்டளைக்கு செலுத்தி அதன்மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இருப்பினும், ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். நிதி பற்றாக்குறை என்ற காரணத்தைச் சொல்லி முறையாக வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உரிய காலத்தில் வழங்காமல் பல மாதங்களுக்கு ஓய்வூதி யர்கள் அலைக்கழிக்கப்படு கிறார்கள்.

மின்சாரத்துறை போன்ற பல்வேறு துறைகளில் ஊதிய ஒப்பந்தம் போடும் போது, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு பலன் தொகைக்கு ஈடான தொகை ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்ட 1998-ஆம் ஆண்டு பிறகு, 3 ஊதிய ஒப்பந்தங்கள் (2003, 2007, 2010) ஆண்டுகளில் போடப்பட்டுள்ளது. இந்த ஊதிய ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த உயர்வு வழங்கப்படவில்லை.

நிலுவை

போக்குவரத்து துறையில் அகவிலைப்படி உயர்வு தொகையை உடனுக்குடன் வழங்குவதில்லை. கடந்த 2013 ஜூலை முதல் அமலான அகவிலைப்படி உயர்வு 7 மாதங்களாக நிலுவையில் உள்ளது. ஜனவரி 2014 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வினை இன்னும் அமல் படுத்தவே இல்லை. தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய கம்யூட்டேஷன், பென்ஷன் அரியர்ஸ், விடுப்பு சம்பளம், பணிக்கொடை என சுமார் ரூ.150 கோடி நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மானியக் கோரிக்கையில்..

எனவே, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசே ஓய்வூதிய திட்டத்தை ஏற்று நடத்த வேண்டுமென ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. வரும் 23-ம் தேதி போக்குவரத்து துறை மானிய கோரிக்கை நடக்கவுள்ள நிலையில், இந்த கோரிக்கை போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

எஸ்.கஜேந்திரன் (ஏஐடியுசி):

அரசு போக்குவரத்து துறையில் ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க தனியாக டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை உள்ளிட்டவை வழங்க வேண்டும். ஆனால், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டிரஸ்ட்டில் போதிய நிதி இல்லை என போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் கூறுகின்றனர்.

இதனால், தொழிலாளர் களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின் றனர். ஓய்வுபெற்ற 3 மாதம் ஆன பிறகு தான் பி.எப்க்கான காசோலை கிடைக்கிறது.

மேலும், ஒட்டுமொத்த ஓய்வூதிய பலன்களை பெறவே சுமார் 5 ஆண்டுகள் கூட ஆகிவிடுகிறது. எனவே, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மற்ற துறைகளில் இருப்பதை போல், போக்குவரத்து துறையின் ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

எம்.சந்திரன் (சிஐடியு):

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கடந்த 1998 ஆம் ஆண்டு டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதில், தொழிலாளிகள் சேர்க்கப்பட்டு 12 சதவீதம் பி.எப் தொகையாக பிடிக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிர்வாகம் தரப்பில் 12 சதவீதம் தொகை போடப்பட்டது. இதுதவிர, மாநில அரசின் வைப்பு தொகையும் இருந்தது. இதனால், டிரஸ்ட் மொத்த தொகை ரூ.1,800 கோடி ஆக உயர்ந்தது.

இதில், நிர்வாகம் செலுத்திய தொகை மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் தொகை பணியில் இருந்து ஓய்வு பெறும்போது, ஓய்வூதிய பண பலன்களாக வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பங்களிப்பு ஒய்வூதிய திட்டம் மூலம், 2003க்கு பிறகு வரும் அனைத்து தொழிலாளிகளும் இதில் சேர்க்கப்பட்டு விட்டனர். தொழிலாளர்களின் பணத்தை பெற்று தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதால், தொழிலாளர்களின் பணத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஏற்கனவே இருந்து வரும் பழைய டிரஸ்ட் அப்படியே செயல்பாடின்றி இருக்கிறது.

ஆனால், இதில், இருந்த தொகை மட்டும் தேய்ந்து கொண்டே செல்கிறது. 2018-ல் டிரஸ்ட்டில் பணமே இல்லாமல் போய்விடும்.

எனவே, இந்த டிரஸ்ட்டை இழுத்து மூடிவிட்டு, தமிழக அரசு மூலம் மின்துறை, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஓய்வூதிய பலன் வழங்குவதை போல், போக்குவரத்து துறைக்கும் வழங்க வேண்டும். இதற்காக தமிழக அரசு ஓய்வூதிய திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x