Published : 18 Nov 2017 10:25 AM
Last Updated : 18 Nov 2017 10:25 AM
தமிழகத்தில் ஆளுநரைக் கொண்டு ஆளமாட்டோம்; நேரடியாகவே ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது, தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான நிகழ்வுதான். அவர் எங்கு ஆய்வு மேற்கொண்டாலும் வரவேற்போம் என்று தமிழக அமைச்சர்களே கூறியுள்ளனர். அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த இது உதவியாக இருக்கும்.
ஆனால், அவர் சட்டப்பேரவையைக் கூட்டி, நிர்வாகம் செய்வதுபோல எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதிகாரத்துக்கு உட்பட்டுதான் ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். ஆளுநர் இத்துடன் ஆய்வுகளை முடித்துக்கொள்ள வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள்தான் இதுபோல விமர்சனம் செய்வார்கள்.
தமிழகத்தில் முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டுமென முன்பு வலியுறுத்தினர். இப்போது, மக்கள் நலனுக்காக அவர் ஆய்வு நடத்தியதை விமர்சிக்கின்றனர்.
இதேபோல குடியரசுத் தலைவரும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டால் பிரதமர் ஏற்பாரா என்று கேட்கிறீர்கள். சட்ட விதிகளுக்கு உட்பட்ட, மக்கள் நலனுக்கான ஆய்வு என்றால், நிச்சயம் அதை பிரதமர் ஏற்றுக்கொள்வார்.
ஆளுநரின் ஆய்வை எதிர்க்க வேண்டிய அமைச்சர்களே, இதை வரவேற்கும்போது, எதிர்க்கட்சியினருக்கு மட்டும் கோபம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தன்னோடு இருந்தவர்கள் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருப்பார்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் ஆளுநரைக் கொண்டு நாங்கள் ஆளமாட்டோம். நேரடியாகவே ஆட்சியைப் பிடிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT