

திருநெல்வேலி: தமிழகத்தில் குழந்தைகள் திருமணங்களைவிட சிறார்கள் தாமாக விரும்பி நடைபெறும் திருமணம் அதிகரித்து உள்ளது என்று மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிறபோதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்தையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. துறை மூலம் சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பபிதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.