Published : 13 Nov 2017 09:50 AM
Last Updated : 13 Nov 2017 09:50 AM

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ஊழல் அதிகரித்து வருகிறது: மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகும் நாட்டில் ஊழல் அதிகரித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ப.சிதம்பரம் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வருகிறார். அவர் ஊழலையும் கறுப்புப் பணத்தையும் பண மதிப்பு நீக்கத்தால் ஒழிக்க முடியாது என்று கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிவு பாதையில் செல்வதாக மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ப.சிதம்பரம், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த பிறகும் அந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு கூறப்படும் விளக்கங்கள் தவறானதாகவும் கேலிக்குரியதாகவும் இருக்கின்றன.

பண மதிப்பு நீக்கத்தால் ஊழலும் கறுப்புப் பணமும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்த ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளில் வெறும் 41 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டுகள் ஆகும். எனவே, பண மதிப்பு நீக்கத்தால் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியவில்லை. அதேபோன்று, ஊழலும் ஒழியவில்லை.

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ஊழல் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவர்களும் லஞ்சம் வாங்குபவர்களும் அடிக்கடி பிடிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். லஞ்ச பணம், தேர்தல் நிதிக்கு அளிக்கப்படும் பணம், நன்கொடையாக அளிக்கப்படும் பணம் என பலவும் வருமான வரிக்குள் வருவது இல்லை. எனவே, ஊழலை ஒழிப்பதற்கு பண மதிப்பு நீக்கம் சரியான நடவடிக்கை அல்ல.

பண மதிப்பு நீக்கம் என்பது சிந்தனையற்ற, மோசமான ஒரு நடவடிக்கை. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நாட்டு மக்கள் மீது இதுபோன்ற ஒரு துன்பத்தை ஏற்படுத்துவதற்கு உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x