

நாகப்பட்டினம்: இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார் நேற்று கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில், இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று நிற்பதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், மீன்வளத் துறை ஆய்வாளர் நடேசராஜா மற்றும் போலீஸார் ஒரு படகில் சென்று, அங்கு நின்றிருந்த இலங்கை பைபர் படகை கைப்பற்றி, அதில் இருந்த 3 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன்(45), சிவக்குமார்(25), ஸ்ரீகாந்தன்(45) ஆகியோர் என்பதும், கடந்த 6-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் படகு இன்ஜின் பழுதடைந்ததால், கடந்த 3 நாட்களாக கடலில் தத்தளித்ததும் தெரியவந்தது.
கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீஸார் மற்றும் தனிப் பிரிவு போலீஸார், 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்களது பைபர் படகை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், எல்லை தாண்டி வந்ததாக 3 பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸார், கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.