சென்னையில் இரவு நேர ரகளை, மோதலை தடுக்க காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸார்

சென்னையில் இரவு நேர ரகளை, மோதலை தடுக்க காவல் நிலையங்களில் கூடுதல் போலீஸார்
Updated on
1 min read

சென்னை: இரவு நேர ரகளை, மோதலை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் துறையின்கீழ் 104 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு காவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இதனால் இரவு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் கொடுக்க வரும் நபர்கள், அத்துமீறலில் ஈடுபடுவது, அடாவடி செய்வது, ரகளையில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன.

அண்மையில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்குள் ரவுடி ஒருவர் நுழைந்து தகராறு செய்ததோடு, போலீஸாரை மிரட்டிவிட்டு சென்றார்.

பின்னர், அவரை போலீஸார் கைது செய்திருந்தாலும், காவல் நிலையத்தில் போதுமான போலீஸார் இருந்திருந்தால் அவரை உடனடியாக கைது செய்திருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் எண்ணினர். இதேபோல சென்னை காவல் நிலையங்களில் இரவு வேளையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பெரும்பாலான காவல் நிலையங்களில் இரவு வேளையில் ஒரு காவலர்மட்டுமே பணியில் இருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து அவர், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இரவு வேளையில் 2 காவலர்கள், கூடுதலாக ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in