Published : 10 Nov 2017 10:13 AM
Last Updated : 10 Nov 2017 10:13 AM
திருச்சி ராஜா காலனியில் உள்ள தினகரனின் உறவினர் (சகலை) டாக்டர் சிவக்குமாரின் வீட்டுக்கு சோதனை நடத்த 3 பேர் அடங்கிய வருமான வரித் துறையினர் நேற்று வந்தனர். சிவக்குமாரின் தந்தை சத்தியமூர்த்தி பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் முதல் தளத்துக்குச் சென்ற வருமான வரித் துறையினர், வீடு பூட்டியிருப்பதைக் கண்டு தரைதளத்தில் வசிக்கும் வாடகைதாரரான ஜோதிடர் மகேந்திரவர்மாவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், பூட்டு சரி பார்க்கும் தொழிலாளர் ஒருவரை அழைத்துவந்து அந்த அறையின் பூட்டை திறக்குமாறு கேட்டனர். ஆனால், செய்தியாளர்கள் சூழ்ந்திருப்பதை கண்ட அந்த தொழிலாளி, நீங்கள் யார்? உரிமையாளர் இல்லாமல் திறக்க முடியாது என்று கூறி பூட்டைத் திறக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரை கீழே அழைத்து வந்து தங்களது அடையாள அட்டைகளை வருமான வரித் துறையினர் காண்பித்தனர். பின்னர், அந்தத் தொழிலாளி கிரில் கேட் பூட்டை மட்டும் திறக்க உதவினாராம். ஆனால், பிரதான மரக்கதவை திறக்க முடியவில்லை என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டாராம்.
இதையடுத்து, அதிகாரிகள் மீண்டும் தரைதளத்தில் உள்ள வீட்டுக்குள் சென்று விட்டனர். பிற்பகல் 4 மணி வரை அவர்கள் அந்த வீட்டுக்குள் இருந்தனர். அவ்வப்போது மாடியைச் சென்று பார்ப்பதும், மீண்டும் திரும்புவதுமாக இருந்தனர்.
பின்னர், 5.30 மணியளவில் மாறன் என்பவர் வந்து சாவியைக் கொடுத்தார். சென்னையில் இருந்து அந்த சாவி எடுத்து வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, மாலை 5.40 மணியளவில் வீட்டைத் திறந்து உள்ளே சோதனை நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT