Published : 18 Nov 2017 09:37 AM
Last Updated : 18 Nov 2017 09:37 AM

டாக்டர்களுக்கான நேர்முகத்தேர்வை நிறுத்தக்கோரி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் முற்றுகை

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழகம் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 560 டாக்டர்கள் பணியிடங்களுக்கு மருத்துவப் பட்டமேற்படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யும் 2 நாள் நேர்முகத் தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குடும்ப நல மையத்தில் நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவப் பட்ட மேற்படிப்பு முடித்த டாக்டர்கள் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் டாக்டர்கள், “நாங்கள் படிப்பை முடிக்க இன்னும் 4 மாதங்கள்தான் இருக்கிறது. 4 மாதங்களுக்கு பின்னர் நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும். இந்த நேர்முகத் தேர்வை நடத்தக் கூடாது” என்று தெரிவித்து முற்றுகையிட்டனர். இதனால் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நேர்முகத் தேர்வை நிறுத்த முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால், அவர்கள் உடனடியாக சென்று நேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் மதியம் வரை நிறுத்தப்பட்டிருந்த கலந்தாய்வு மீண்டும் நடக்கத் தொடங்கியது.

அதிகாரி விளக்கம்

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதனால் டாக்டர்களை தேர்வு செய்கிறோம். அவர்கள் படிப்பை முடித்துவிட்டு வந்த பின்னரும் தேர்வு செய்யப்படுவார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x