

சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக எம்.ராஜ்குமார் பொறுப்பேற்றுள்ளார். மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவ நிலைமாற்ற அமைச்சகத்தில் இருந்து அயல் பணியாக இந்தப்பதவிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்திய வனப் பணியில் 2014-ம்ஆண்டு பிரிவைச் சேர்ந்த ராஜ்குமார், இதற்கு முன்பு நாகாலாந்தில் உள்ள கோஹிமா கோட்டவன அதிகாரியாக பணியாற்றினார். சென்னை அலுவலகத்தில் குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள இவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளிநாட்டுக்கு பணியாளர்களை வேலைக்கு அனுப்பும் போலியான முகமைகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில முகமைகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பான குடிபெயர்வு தொடர்பாகபொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.