புதுப்பிக்கப்பட்ட அரசு பேருந்துகள்: ஆக.11-ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

புதுப்பிக்கப்பட்ட அரசு பேருந்துகள்: ஆக.11-ல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Published on

சென்னை: புதுப்பிக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை ஆக.11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கஉள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பிஎஸ் 4 ரக பேருந்து வருகையால் பேருந்துகள் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இயக்கப்படுகின்றன.

இதிலும் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் பிங்க் நிறம் அடிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

100 பேருந்துகள் தொடக்கம்: அதன்படி, அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 100பேருந்துகளை வரும் 11-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in