Published : 17 Nov 2017 03:25 PM
Last Updated : 17 Nov 2017 03:25 PM
தரமற்ற மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற மதுபான உற்பத்தியைத் தடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளுக்கு வருவதற்கு முன்பாகவே ஆலைகளிலேயே பரிசோதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், 17 மதுபான ஆலைகளுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு, உணவு பாதுகாப்பு ஆணையர், வெளிநாட்டு மதுபானங்களை இந்தியாவில் தயாரிக்கும் 17 நிறுவனங்களும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், மதுபான ஆலைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், தரமற்ற மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT