

மதுரை: மதுரை விமான நிலையத்தில் தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு சேவை வழங்கப்படுகிறது. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சேவை வழங்குகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவையாக ஸ்பைஸ் - ஜெட் , ஏர் - இந்தியா விமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவை அளிக்கிறது. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கரோனாவுக்குப் பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவை நடக்கிறது. மேலும், சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவைக்கு தற்போது அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் SG-2981 விமானம் மதுரையிலிருந்து முதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, சென்னையில் இருந்து கோவாவுக்கு மாலை 4 மணிக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து SG-2983 விமானம் கோவாவில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை வந்தடையும் என ஸ்பைஸ் - ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) முதல் 19-ம் வரை SG-2705 விமானம் ஹைதராபாத்திலிருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்துக்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் SG-04 ஆக மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடைகிறது.
அதுபோன்று SG-04 விமானம் கொழும்புவிலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் மதுரையில் இருந்து SG-2701 விமானமாக மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் ஸ்பைஸ் - ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.