

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடையை போன்று கடும் வெயில் நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் வெப்பநிலை திடீரென உயர்ந்திருப்பதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: கடந்த வாரம் வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி இருந்தது. இதன் காரணமாக தமிழகம் நோக்கி வீச வேண்டிய ஈரப்பதம் மிகுந்த மேற்கு திசைக் காற்றை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஈர்த்துக்கொண்டது. மேலும் தமிழகம் நோக்கி மேற்கு திசைக் காற்று வலுவாக வீசவில்லை.
இதனால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் காற்றில் ஈரப்பதம் இருந்தாலும், அவை மேகமாக மாறி வளிமண்டல மேலடுக்கு பகுதிக்கு செல்வது தடை பட்டுள்ளது. இதனால் மழையும் குறைந்துவிட்டது. வானில் மேகக்கூட்டங்கள் இல்லாததால் சூரிய ஒளியும் நேரடியாக பூமி மீது பட்டு வெப்பம்100 டிகிரிக்கு மேலும் அதிகரித்துள்ளது. வரும் 10-ம் தேதி வரை அதிகவெப்பநிலை நீடிக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அதன் தாக்கத்தால் 10-ம் தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக குறையும்.