Published : 28 Nov 2017 10:51 AM
Last Updated : 28 Nov 2017 10:51 AM

தாம்பரம் அருகே குடியிருப்புகளில் மழை நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரியில் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம் அருகே திருவஞ்சேரி ஊராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சியில் சீரடி சாய் நகர், ஈஎஸ்ஐ, வளர் நகர், காமராஜ் நகர் என பல பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சுற்றி கடந்த ஒரு மாதமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், முதியவர்கள் என பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

ஒன்றும் பலனில்லை

இந்நிலையில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக் கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகத்தினர் மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் பெய்த மழையினால் குடியிருப்பு மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் திருவஞ்சேரி அகரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற் பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் அதிகாரிகள் திருவஞ்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலம் வழியாக தற்காலிகமாக கால்வாய் அமைத்து மழைநீரை வெளியேற்றவும், திருவஞ்சேரி அகரம் சாலையில் கட் அண்ட் கவர் முறையில் சிறு பாலத்தை உடனடியாக அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x