Published : 03 Nov 2017 08:44 AM
Last Updated : 03 Nov 2017 08:44 AM

3 வங்கிக் கணக்குகள் உட்பட அதிமுகவின் அனைத்து ஆவணங்களையும் நவ.10-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்: சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், அதிமுகவின் 3 வங்கிக் கணக்குகள் உட்பட கட்சியின் அனைத்து ஆவணங்களையும் வரும் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் செம்மலை, முதல்வர் கே.பழனிசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் 3 வங்கி மேலாளர்களுக்கு எதிராக அதிமுக அம்மா அணி மற்றும் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

நாங்கள் இருவரும் கட்சி விதிப்படி அதிமுக பொதுச் செயலாளராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டோம். ஆனால், தற்போது அதிமுகவுக்கு விரோதமான செயல்பாடுகளை முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்கள் கட்சிப் பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும். மேலும், அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளராக செம்மலை ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அவர்களும் பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும்.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்தக் கூட்டமே செல்லாது என்கிறபோது, அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 1 முதல் 12 வரையிலான தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். குறிப்பாக, எங்களை கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட தடை விதிக்க வேண்டும். அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் தொடர தடை விதிக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் மயிலாப்பூர் கரூர் வைஸ்யா வங்கி, அபிராமபுரம் இந்தியன் வங்கி, கதீட்ரல்ரோடு பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளில் உள்ள கணக்குகளை கையாள தடை விதிக்க வேண்டும்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் கட்சி ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், இதர வரவு செலவு ஆவணங்கள் என அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளன. அதில் அவர்கள் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. ஆவணங்களை அவர்களுக்கு சாதகமாக திருத்தும் நிலையும் உள்ளது. எனவே, கட்சியின் 3 வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள், வரவு-செலவு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. சசிகலா, தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி, கட்சியின் 3 வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிமுக தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் வரும் 10-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதுதொடர்பாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறும்போது, ‘‘கட்சியின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கையோடு, கட்சி தொடர்பான ஆவணங்களை திருத்தவோ, அழிக்கவோ மாட்டேன் என மேலாளர் மகாலிங்கம் உத்தரவாதம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x