குடியரசு தலைவர் இருந்த நிலையில் ஆளுநர் மாளிகை எதிரே திடீர் தீ விபத்து

குடியரசு தலைவர் இருந்த நிலையில் ஆளுநர் மாளிகை எதிரே திடீர் தீ விபத்து
Updated on
1 min read

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசுமுறைப் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தார். இந்நிலையில் அங்கு ஊழியர்கள் செல்லும் 2-வது நுழைவு வாயில் எதிரே உள்ள காலி இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையறிந்த போலீஸார் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே ராஜ்பவன், கிண்டி ஆகிய இடங்களிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து சில நிமிடங்களில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். இதனால், எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து கிண்டி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், காலி இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பற்றி இருந்ததும், அதன் காரணமாக கரும்புகை வெளியேறியதும் தெரியவந்தது. குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் இருந்தபோது, ஆளுநர் மாளிகை எதிரே தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in