Published : 02 Nov 2017 06:03 PM
Last Updated : 02 Nov 2017 06:03 PM

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்து கைதான ஐபிஎஸ் அதிகாரி மீது விசாரணைப் பிடி இறுகுகிறது

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்து கைதான ஐபிஎஸ் அதிகாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் சைபர் கிரைம் போலீஸார் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவிற்கு விரைந்த தனிப்படை அவரது அலுவலகத்திலுள்ள லேப்டாப், ஹார்ட் டிஸ்குகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

சென்னையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வில் ப்ளூ டூத் வைத்து காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் சிக்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். அங்கு அவரது பெயரில் அவருடய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகடாமி நடத்துகிறார். சபீர் கரீம் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் ஐஏஎஸ் தேர்வுக்காக கடந்த மாதம் முதல் விடுப்பில் இருக்கிறார்.

தேர்வில் காப்பியடித்ததாக பிடிபட்ட ஷபீர் கரீம் மீது மோசடி(420), கூட்டுச்சதி (120(பி)), 34 ( தகவல் தொழில் நுட்பத்தை தவறாகக் கையாளுதல்) மற்றும் 66 ஐடி பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்றிரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தேர்வு மையத்திற்குள் நுழைந்தபோது 2 செல்போன்களையும் அவர் மறைத்து எடுத்துச் சென்றாரா அல்லது தேர்வு மையத்திற்குள் செல்போனை கொண்டுசெல்ல அவருக்கு யாராவது உதவினார்களா எனபது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவரது செல்போன்களையும், ப்ளூ டூத்தையும் பறிமுதல் செய்து சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பபட்டுள்ளது.

சென்னை சைபர் கிரைம் போலீஸார் லேப்புக்கு கொண்டு செல்லப்பட்ட செல்போன்களை தீவிரமாக ஆய்வு செய்து செய்து வருகின்றனர். அதில் கிடைக்கும் ஆதாரங்கள்தான் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானதாக போலீஸார் கருதுகின்றனர். அதனால் செல்போனில் பதிவாகியிருக்கும் படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் கடைசியாக யார் யாரிடம் பேசினார், சென்னையில் அவருக்கு காவல் துறையில் யாராவது உதவினார்களா? என்கிற ரீதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள போன் உரையாடல்களையும் ஆய்வு செய்ய எடுத்துள்ளனர். கேள்வித்தாளை ஸ்கேன் செய்து மனைவி அனுப்பியது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

சபீர் கரீம் மனைவி கொச்சின் பகுதியில் ஐஏஎஸ் அகாடமி மையங்களை நடத்தி வருகிறார். அங்கு சென்ற தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். சபீர் கரீமின் உறவுப் பெண் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவில் உள்ள அலுவலகத்திலிருந்த கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சபீர் கரீம் கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அங்கும் சிவில் சர்வீஸ் தேர்விலும் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. அது பற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபீர் கரீமின் தொழில் கூட்டாளியான சம்ஜத் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பிறகு சபீர் கரீமை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x