Published : 30 Nov 2017 10:22 AM
Last Updated : 30 Nov 2017 10:22 AM

சீன எல்லையில் குமரி வீரர் குண்டு பாய்ந்து பலி

சீன எல்லையில் பணியில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து மரணமடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறை அடுத்துள்ள கல்லங்குழியைச் சேர்ந்தவர் தாசன். இவரது மகன் ஜெஸ்டின் கிறிஸ்டோபர் (27). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இமாச்சல பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் பணியில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ராணுவ அதிகாரி ஒருவர், ஜெஸ்டின் கிறிஸ்டோபர் பணியில் இருந்தபோது குண்டு பாய்ந்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சுட்டது யார் என்பது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

ஜெஸ்டின் கிறிஸ்டோபர் உடல் திருவனந்தபுரம் வழியாக இன்று அல்லது நாளை அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x