Published : 11 Nov 2017 10:16 AM
Last Updated : 11 Nov 2017 10:16 AM

ஐசிஎப்-ல் பழைய ரயில் உதிரி பொருட்களால் 20 அடியில் உருவாக்கப்பட்ட பெண் சிற்பம்

பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) பழைய ரயில் உதிரி பொருட்களால் 20 அடியில் உருவாக்கப்பட்டுள்ள பெண் சிற்பம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூரில் ஐசிஎப் பொதுமேலாளராக எஸ்.மணி பொறுப்பேற்ற பிறகு, ஐசிஎப் வளாகத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மரம் வளர்த்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ஐசிஎப் வளாகத்தில் பழைய ரயில் உதிரி பொருட்களால் சிற்பம் உருவாக்குதல், ஓவியம் வரையும் முகாம் நேற்று நடந்தது. இதில், சிற்பக் கலைஞர்கள், ஐசிஎப் ஊழியர்கள், சிறுவர்கள் என 21 பேர் பங்கேற்றனர். இதில், டி.செழியன் என்ற சிற்பக் கலைஞர் பழைய ரயில் உதிரி பொருட்கள் மூலம் 20 அடியில் பெண் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தச் சிற்பம் 20 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதேபோல், ஐசிஎப் ஊழியர்கள், சிறுவர்கள், ஐசிஎப்-ல் உள்ள சுவர்கள், பழைய ரயில் பெட்டிகளில் தங்களது ஓவியங்களை வரைந்தனர்.

இதையடுத்து, நேற்று மாலையில் சிற்ப கலைஞர்கள், ஓவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.

சென்னை கைவினை அறக்கட்டளைத் தலைவர் டெபோரா தியாகராஜன், ஐசிஎப் பொதுமேலாளர் எஸ்.மணி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x