Published : 07 Nov 2017 07:54 AM
Last Updated : 07 Nov 2017 07:54 AM

பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கக் கூடாது: சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னையில் உள்ள பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை, மின்கசிவு இல்லை என்பதை தாளாளர், தலைமைஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். அதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கடந்த அக்.31-ம் தேதி முதல் நவ.6-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர வழிவகைகள்

கடந்த நவ.1-ம் தேதி பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், தலைமைஆசிரியர்கள், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறு, அவற்றுடன் கழிவுநீர் கலக்காதவாறும் நிரந்தர வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் தொடங்கும்போது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை என்பதையும், பள்ளி மாணவர்களை நோய்த் தொற்று பாதிக்காத வகையில் சுற்றுப்புற சூழல் நன்றாக உள்ளது என்பதையும், மின்கசிவு இல்லை என்பதையும் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொடர்புடைய மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று, இதுகுறித்து ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x