Published : 20 Nov 2017 07:38 PM
Last Updated : 20 Nov 2017 07:38 PM
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தற்போது செய்யப்பட்டுள்ள விதிகள் திருத்தம் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டிஎன்பிஎஸ்சி குரூப்-4, விஏஓ தேர்வுகளை ஒருங்கிணைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்றும், இதில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புறங்களில் சுமார் 1 கோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் திருத்தங்கள் இருக்க வேண்டும்.
ஏற்கெனவே ரயில்வே துறையில் பிறமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குறிப்பாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், விதிகள் திருத்தம் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் இளைஞர்களுக்கே முன்னுரிமை என திருத்தங்கள், விதிகள் இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் இத்தகைய விதிகள் பொருத்தமற்றது. எனவே, டிஎன்பிஎஸ்சி விதிகளில், தற்போது செய்யப்பட்ட விதிகள் திருத்தத்தைத் திரும்பப் பெற்று தமிழக மக்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT