Published : 10 Nov 2017 09:30 AM
Last Updated : 10 Nov 2017 09:30 AM
பொறியியல் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகமே தொடர்ந்து நடத்தும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கான இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னை வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வுசெய்வார்கள். மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை கொண்டுவரப்படும் என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் பிஇ, பிடெக், பிஆர்க், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, பொறியியல் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்புக் குழுவும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளராக பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குரோம்பேட்டை எம்ஐடியில் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியராக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளராக பேராசிரியை ஜெ.இந்துமதி பணியாற்றி வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT