Published : 17 Nov 2017 09:52 AM
Last Updated : 17 Nov 2017 09:52 AM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் தினகரன் ஆலோசனை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரும் பங்கேற்றனர். தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், வருமானவரித் துறை சோதனை, தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இரட்டை இலை வழக்கு என அடுத்தடுத்து வரும் நெருக்கடிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘‘சசிகலா குடும்பத்தினரை பாஜக எதிரியாக பார்க்கிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சை கேட்டுக்கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. எனவே, இனியும் அமைதி காக்காமல் பாஜகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லாலுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் இணைந்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x