Published : 25 Nov 2017 10:27 AM
Last Updated : 25 Nov 2017 10:27 AM
இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து சென்னையில் தொடங்கப்பட்டுள்ள 79 சாலை பாதுகாப்பு மையங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாலை விபத்துகளை குறைக்க, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு போக்குவரத்து ஆணையர் தயானந்த கட்டாரியா உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருசக்கர வாகன ஷோரூம்களில் சாலை பாதுகாப்பு மையங்கள் திறக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் தற்போது, 79 சாலை பாதுகாப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வீடியோக்கள் மூலம் விளக்கம்
இதுதொடர்பாக இணை போக்குவரத்து ஆணையர் ப.ராமலிங்கம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் நடக்கும் மொத்த விபத்துகளில் 50% விபத்து இருசக்கர வாகன ஓட்டிகள் மூலம் ஏற்படுகிறது. இளைஞர்கள் அதிகஅளவில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். எனவே, இருசக்கர வாகன விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஷோரூம்களில் சாலை பாதுகாப்பு மையங்கள் திறக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 79 சாலை பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இருசக்கர வாகனங்கள் வாங்க வரும் இளைஞர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை விதிகள் குறித்தும் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பான வீடியோக்கள் மூலம் விளக்கம் அளிக்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT