Published : 05 Nov 2017 09:45 AM
Last Updated : 05 Nov 2017 09:45 AM
சென்னை கொண்டித்தோப்பு மற்றும் பரங்கிமலை காவலர் குடியிருப்புகளில் மழைநீர் பாதிப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று காலை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மீட்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களுடன் போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்து முடுக்கி விட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பரங்கிமலை மற்றும் கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை வசதி குறித்து நேற்று காலை ஆய்வு செய்தார்.
அப்போது, காவலர் குடியிருப்புகளில் அதிக குப்பைகள் உள்ளன. மின் இணைப்பு மீட்டர் பாக்ஸ்கள் தாழ்வான பகுதியில் உள்ளன. இதனால், சிறிய மழை வந்தால் கூட அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன என காவல் ஆணையரிடம் காவலர் குடும்பத்தினர் முறையிட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறும்போது, “காவலர் குடியிருப்புகளில், அடிப்படை வசதி கள் குறித்து, அந்தந்த காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர் ஆகியவற்றை உடனடியாக அகற்றுவதற்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மழையில், களப்பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மழை பாதுகாப்பு உடை மற்றும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
ஆய்வின்போது கூடுதல் காவல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், ஜெயராம், இணை ஆணையர்கள் அன்பு, சுதாகர் உள்ளிட்டோர் உடன் இருந் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT