Published : 17 Nov 2017 01:08 PM
Last Updated : 17 Nov 2017 01:08 PM

ஜிபி சாலை ஒருவழிப் பாதையில் தாறுமாறாக வந்த பைக்: மாநகரப் பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்

சென்னை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் ஒருவழிப் பாதையில் அலட்சியமாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் எதிரில் வந்த பேருந்து மீது மோதினார். இதில் அவருக்கும் அவருடன் பயணித்த பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது.

மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியதால் இருவழிப்பாதையாக இருந்த அண்ணா சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனால் பாரிமுனையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை அருகே எல்.ஐ.சிக்கு முன்புறம் ஜெனரல் பேட்டர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டு. எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே வலப்புறம் திரும்பி ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையும்.

இதற்காக ஜெனரல் பேட்டர்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. ஜெனரல் பேட்டர்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டாலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அலட்சியமாக எதிர் திசையில் ஒருவழிப்பாதை என்று தெரிந்தும் வருவது வாடிக்கையாக உள்ளது.

ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் போக்குவரத்துப் போலீஸார் கண்காணிப்பும் குறைவு என்பதால் தினமும் இது போன்று செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்களுடன் தவறான வழியில் செல்பவர்கள் மோதிக்கொள்வதும் அதனால் வாக்குவாதம் ஏற்படுவதும் வாடிக்கையான விஷயம.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வாலிபர் ஒருவர் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக எதிர் திசையில் வந்தார். அப்போது எதிரில் வந்த 60 சி மாநகரப் பேருந்தை கவனிக்கவில்லை. இதனால் மாந்கரப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதினார்.

தவறான பாதையில் வேகமாக மோட்டார் சைக்கிள் எதிரில் வருவதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் மோட்டார் சைக்கிள் பேருந்து மீது மோதியதில், பேருந்து அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும், உடன் வந்த பெண்ணும் காயமடைந்தனர்.

அவர்களை போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் ஆங்காங்கே வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைப்பதும், எதிர்த்திசையில் வாகனங்களை ஓட்டி வருவதையும் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x