Published : 07 Nov 2017 05:38 PM
Last Updated : 07 Nov 2017 05:38 PM
உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே தலைவர் கமல்ஹாசனாகத்தான் இருப்பார் என்று கமல் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கட்சி தொடங்க தனது தொண்டர்களிடம் ரூ.30 கோடி நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மூலக்கொத்தளத்தில் மழை நிவாரணப் பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இமயமலை போல் இருக்கும் அதிமுக சிறு குன்றுகளைக் கண்டு அஞ்சாது. எம்ஜிஆர் அதிமுக என்ற இயக்கத்தை பொதுமக்களை, தொண்டர்களை நம்பி ஆரம்பித்தார். ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார்.
ஆனால் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ தொண்டர்களிடம் கட்சி நடத்த பணம் கேட்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் கட்சி நடத்த தொண்டர்களிடம் ரூ.30 கோடி நிதி கேட்கிறார். அரசியல் கட்சிகளிடம் ரூ.30 கோடி வசூல் செய்வது என்ன கால்குலேசன்.
கமல்ஹாசன் என்ன கணக்கில் இருக்கிறார். உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் ரூ.30 கோடி வசூல் செய்யும் ஒரே தலைவர் கமல்ஹாசனாகத்தான் இருப்பார்'' என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதன் பின்னர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயகுமார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT